காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் எதிர்வரும் 20ம் திகதி போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து அப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி கிளிநொச்சியில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பில் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒன்பது ஆண்டுகளாக எங்களுடைய பிள்ளைகளை மீட்பதற்கு பல்வேறு வழிகளிலும் போராடி சர்வதேசத்திற்கு உண்மை நிலைமைகளை எடுத்து கூறி வருகின்றோம்.
தமது பிள்ளைகளை தேடிய 300ற்கு அதிகமாக தாய், தந்தையர் இறந்துள்ளனர்.
உள்ளூரில் எமக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஜெனீவா கூட்டத் தொடரிலும் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றோம். இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதாக சொல்லி கால இழுத்தடிப்பையே செய்கின்றனர்.
பிள்ளைகளை காணாது இறந்த தாய் தந்தையரைப் போல மாரித் தவளை போல் நாங்களும் கத்திவிட்டு இறந்து விடுவோ என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒன்பதாவது கூட்டத் தொடரிலாவது ஜனாதிபதி சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று பெற்றுத்தருவதற்கு முன்வர வேண்டும்.
பல தலைவர்களை இந்த ஒன்பது வருடங்களில் கண்டுள்ளோம். இவர்கள் தெற்குக்கு ஒரு நீதியும் வடக்குக்கு ஒரு நீதியும் வழங்குகின்றனர்.
எனவே எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடம் நிறைவடைகின்ற நிலையில் நீதி வேண்டி போராட்டம் ஒன்றிணை மேற்கொள்ளவுள்ளோம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு தெரிவித்தார்.