கடந்த ஆட்சிக் காலத்தில் படுகொலையாளிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் இன்று(11) இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பல ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற, எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிற அறவழிப் போராட்டத்தினை தற்போது முன்னெடுத்திருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டம் எனும் பெயரில் மிக மோசமான, மனித குலத்துக்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்கு உட்படுத்தப்படும் மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தை அளித்தும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் நாட்களை கழித்து விட்டார்கள். இருக்கும் காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்து வாழ்வதற்கு மாற்றத்தினை உருவாக்கப் போவதாகக் கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட இணைப்பாளர் செல்வநாதன் தலைமையிலான இந்த கையெழுத்துப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் குககுமார், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.