Wednesday, March 12, 2025
Huisதாயகம்தையிட்டி விவகாரத்தில் மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை...!

தையிட்டி விவகாரத்தில் மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை…!

தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று தையிட்டி காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தையிட்டி காணி உரிமையாளர்கள் மேலும் கூறுகையில்,

“மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர அண்மையில் யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாக தையிடி விவகாரம் இருக்கின்றது.

அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது.

அதேநேரம், தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடயம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடயம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர்.

ஆனால் இன்று வாக்குறுதி வழங்கிய மூவரும் பொம்மைகள் போன்று வாய் பேசாது உள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம்.

ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடயத்தை வேறு திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தப்பட ஜனாதிபதிக்கு கூறியிருந்தார்.

ஆனாலும் அன்று கஜேந்திரகுமார் எம்.பி எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்நிலையில், எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறு நாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச் சேர்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!