நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (08) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன முன் மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழி மொழிந்தார்.
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார வழிமொழிந்தார்.
ஒன்றியத்தின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, எஸ். எம். மரிக்கார் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக நாடாளுமன்றத்தை பொது மக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.