உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைப்பெற உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நாளை (10) இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் அவர்களின் ஆலோசகரும், பிரத்தியேக செயலாளருமான சிவபிரகாசம் அவர்களும் இணைந்து கலந்துக்கொள்ள உள்ளார்.
தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனவரி 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ள உலக அயலகத் தமிழர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இருநாள் விஜயத்தை மேற்கொண்டு விழாவில் உரையாற்றவும் உள்ளார்.
இதன் போது இலங்கை மலையக மக்கள் பற்றிய கருத்துக்களை முன்வைக்க இருப்பது குறிப்பிடதக்க விடயமாகும். மேற்படி விஜயத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களையும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், இலங்கை மலையக மக்கள் குறித்த நலன் விரும்பிகள் ஆகியோரை சந்தித்து இலங்கை வாழ் மலையக மக்களின் பிரச்சினைகள், மலையக மக்களின் அபிவிருத்தி சமூக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதும் சிறப்பம்சமாகும்.
இரு நாள் நிகழ்வுகளாக இடம்பெறும் உலக அயலகத் தமிழர் தின நிகழ்வுகளை தமிழ் நாடு அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதோடு 11 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் விழாவில் தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்வு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேரூரை ஆற்றவுள்ளதோடு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
12 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வின் போது தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்கள் உலக அயலகத் தமிழருக்கான விருதுகளை வழங்கி வைத்து பேரூரை ஆற்றவுள்ளார்.
இவ்விழாவிற்கு இலங்கை, இந்தியா, மொரிசியஸ், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலகெங்கிலும் வாழும் சாதனைத் தமிழர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது.