ஒரு நிமிடத்திற்கு 4இலட்சத்து 50 ஆயிரம் தோட்டாக்களை சுடக் கூடிய துப்பாக்கியைச் சீனா உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிரடியான துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளையும் இடை மறித்துத் தாக்க முடியும். சீனாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மனிதகுல வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரத் துப்பாக்கி என்று கூறுகிறார்கள்.
அமெரிக்காவிடம் உள்ள துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அதிக பட்சமாக நிமிடத்துக்கு 4,500 தோட்டாக்களை மாத்திரமே சுட முடியும். இதனடிப்படையில் சீனா தயாரிக்கும் துப்பாக்கிகள் அமெரிக்கா வைத்திருக்கும் துப்பாக்கிகளை விட 100 மடங்கு சக்தி மிக்கவையாக இருக்கும்.
முதலில் இதற்குத் தோட்டாக்களை நிரப்புவது என்பது சவாலானதாக காணப்பட்டது. ஆனால் சீன பொறியியல் வல்லுநர்கள் இந்தத் துப்பாக்கிக்குப் பீப்பாய்களைப் பயன்படுத்தி தோட்டாக்களை நிரப்புகின்றனர். முழுவதுமாகத் தோட்டாக்கள் தீர்ந்த பின்னர் பீப்பாய்க் கொள்கலனில் தோட்டாக்கள் நிரப்பப்படும்.
இந்த 4 இலட்சத்து 50 ஆயிரம் தோட்டக்களைச் சுடும் ஆயுதத் தொழில்நுட்பம் அவுஸ்ரேலிய நாட்டில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டின் போது சீனா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி இந்தத் தொழி நுட்பத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் , பல கட்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் சீனா தற்போது இந்த இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.